Friday, October 17, 2008

இண்ட்ராஃப் நிகழ்வுகளுக்கு தற்காலிக நிறுத்தம்!



இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் திரு.வேதமூர்த்தி, தற்சமயத்திற்கு இண்ட்ராஃப் இயக்கத்தின் நிகழ்வுகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். சட்ட வல்லுநரான திரு.வேதமூர்த்தி மலேசியச் சங்கங்கள் சட்டம் 1966-ஐ ஆய்வு செய்து வருகிறார். அதன் அடிப்படையில் இன்னும் சில தினங்களில் இண்ட்ராஃப் எடுத்துக் கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் அம்னோ அரசாங்கம் இண்ட்ராஃபிற்கு எதிராக விதித்தத் தடையை ஆட்சேபிக்கும் வகையில் அனைத்து இண்ட்ராஃப் ஆதரவாளர்களையும் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆரஞ்சு நிற உடையினை அணியுமாறு திரு.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். இத்தினங்களில் ஆரஞ்சு நிற உடையினை அணிந்து அம்னோ அரசாங்கத்தின் மீது இந்திய மக்களின் அவநம்பிக்கையையும் கண்டனத்தையும் அடையாளமாகக் காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில் மலேசிய மனித உரிமை ஆணையமான 'சுஹாக்காம்', இண்ட்ராஃபிற்கு விதிக்கப்பட்டத் தடைக்கு வித்திட்ட ஆதாரங்களை அரசாங்கம் வெளிக்கொணர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. கண்மூடித்தனமாக ஓர் இயக்கத்தை தடை செய்வதனால் மக்களின் போராட்டம் மேலும் வலுப்பெறுமே தவிர முடங்கிவிடாது என அது கருத்துரைத்தது.
ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் கருத்துரைக்கையில், அம்னோ அரசாங்கத்தின் இத்தகு நடவடிக்கையானது கோழைத்தனம் என்றும் அராசகமானது என்றும் கூறினார்.

அம்னோ அரசாங்கம், இண்ட்ராஃபிற்கு எதிராக விதித்த தடைக்கான சட்டப்பூர்வமான காரணங்களை உடனடியாக வெளிபடுத்த வேண்டும் என்று இந்து நடவடிக்கை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.முகுந்தன் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், இவ்வியக்கம் ஆயுதமின்றி உரிமைக்காக அமைதிவழி போராட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட மலேசிய இந்திய சமுதாயத்திற்காகக் குரல் கொடுக்கும் ஓர் உன்னத இயக்கம் என வர்ணித்தார்.
இண்ட்ராஃப் இயக்கத்தை தடை செய்ததன் வழி, அம்னோ அரசாங்கம் நெருப்புக் கோழியைப் போல தன் தலையையே மண்ணுக்குள் இட்டுக் கொண்டது என புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் லியூ சின் தோங் வர்ணித்துள்ளார்.
சிவில் மனித உரிமை போராட்டவாதியான டாக்டர் தோ கின் வூன் கருத்துரைக்கையில், உண்மையில் மத்திய அரசாங்கம் நேர்மையாகவும் மக்களின் மீது பரிவும் கொண்டிருந்தால் இதுபோன்ற இழிச்செயல்களில் ஈடுபடாது, மலேசிய இந்தியர்களின் அடிப்படைப் பிரச்சனைகளை கண்டறிந்துக் களைந்திருப்பர் என்று கூறினார்.
இவ்வியக்கத்தைத் தடைச் செய்வதன்வழி அம்னோ தன் நிலைமையை மேலும் மோசமாக்கிக் கொள்கிறது என அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில் பல மனித உரிமை இயக்கங்கள், அரசியல் கட்சிகள், தொண்டூழிய இயக்கங்கள் அம்னோ அரசாங்கத்தின் இனவாத அடிப்படையிலான அராசகத்தைக் கண்டித்து கண்டனக் குரல்கள் எழுப்பி வருகின்றன.
போராட்டம் தொடரும்...